பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கு வாய்ப்பே கிடையாது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
10 நாட்கள் மேலாகியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே லாரி வாடகை விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டதால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, நேற்று இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகள்தான் பெட்ரோல் டீசல் விலையை மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு மட்டுமே அதிக லாபம் கிடைப்பதால் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மொத்தத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது என்றார்.