ஆ.ராசா விரைவில் சிறை செல்வார்; ஓட்டுப்போட்டு பயன் இல்லை - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!
ஆ.ராசா மீதான முறைகேடு வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது, விரைவில் சிறை செல்வார் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ் செல்வனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. வேட்பாளரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா. அவர் ஊட்டிக்கு வரும் போதெல்லாம் மலைவாழ் மக்களை சந்தித்து செல்வார். நீலகிரி மாவட்ட மக்களை ஜெயலலிதா மிகவும் நேசித்தார்.
நீலகிரிக்கு அதிக முறை வந்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை. அவர் தலைக்கணம் பிடித்தவராக பார்க்கப்படுகிறார். பெரியவர்களை மதிப்பதில்லை.
ஆ.ராசா சிறை செல்வார்
நாட்டுக்காக பாடுபட்டவர்களை, மக்களை மதிப்பதில்லை. அவர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் தான் தி.மு.க. வேட்பாளர்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் புரிகிற கட்சி தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணும் கட்சியும் தி.மு.க. நாடு தலைகுனியும் வகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்த கட்சி தி.மு.க. 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்தது நாம் இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் மீண்டும் வர உள்ளது. ஆகவே அவர் இங்கே இருப்பாரா எங்கே இருப்பார் என்பது விரைவில் தெரிய வரும்.
தி.மு.க.வில் ஒவ்வொருவராக ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆ.ராசாவும் ஜெயிலுக்கு செல்வார். என்று தெரிவித்தார்.