நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது - ட்ரம்ப் ஆதங்கம்
போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என ட்ரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு பிரதமர் மோடி அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார்.
மேலும், போர் நிறுத்தத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினார். இதற்கிடையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப்," காங்கோ ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் இருநாட்டு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள்.
புலம்பும் ட்ரம்ப்
ஆப்பிரிக்காவுக்கும் உலகிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதால் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா - கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதால் எனக்கு போர் நோபல் பரிசு கிடைக்காது.
மத்திய கிழக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்ட எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. அதன் விளைவுகள் என்ன இருந்தாலும் என்னுடைய பணி குறித்து மக்களுக்கு தெரியும். அதுவே எனக்கு முக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.