‘பிரியாணி சாப்பிட்ட பில் ரூ.27 லட்சம்’ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அதிர்ச்சி கொடுத்த போலீசார்

pakistancricketboard PAKvNZ pakistanpolice biriyanibill
By Petchi Avudaiappan Sep 23, 2021 01:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 நியூசிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் போலீசார் ரூ.27 லட்சத்துக்கு பிரியாணி சாப்பிட்டதாக பில் அளிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. இதில் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி இந்த தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்தது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே நியூசிலாந்து வீரர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.அவர்களின் பாதுகாப்புக்காக 5 எஸ்பிக்கள் உள்ளிட்ட 500 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தினமும் இரண்டு வேளை பிரியாணி பரிமாறப்பட்டதாகவும், இதற்கான பில் தொகை ரூ.27 லட்சம் என ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பில் தொகையை தற்போது ஹோட்டல் நிர்வாகம் பாகிஸ்தான் நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் பிரியாணி பில் தவிர்த்து பிற உணவுகளில் பில் தொகை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பில் தொகை இன்னும் ஓட்டல் நிர்வாகத்துக்கு கிளியர் ஆகவில்லை என கூறப்படுகிறது.

அதேசமயம் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது பிரியாணி பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறது.