ஷமிக்கு மதச்சாயம் பூச நினைத்தவர்களின் முகத்தில் கரியை பூசிய பாகிஸ்தான் வீரர் - குவியும் பாராட்டு
பாகிஸ்தானுடனான தோல்வியால் இந்திய அணி வீரர் ஷமி கடுமையாக விமர்சிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே அதனை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்திற்குள்ளாயினர். இதனால் இந்திய வீரர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக இந்திய அணி வீரர் முகம்மது ஷமி வீசிய 18 வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் சென்றது.
இதனை குறிப்பிட்டு ஷமி இஸ்லாமியர் என்பதன் காரணமாக தான் பாகிஸ்தானுக்கு சுலபமாக பந்துவீசிவிட்டார் என தகாத வார்த்தைகளில் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். ஆனால் இதனை கண்டித்த முன்னாள், இந்நாள் வீரர்கள் ஷமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி போட்டியைப் பாகிஸ்தான் வெல்லக் காரணமாக இருந்தவருமான முகமது ரிஸ்வான் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு வீரர், தனது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அனுபவிக்கும் அழுத்தமும், நடத்தும் போராட்டங்களும், செய்யும் தியாகங்களும் அளவிட முடியாதவை. முகமது ஷமி ஒரு நட்சத்திரம். உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். உங்கள் நட்சத்திரங்களை மதியுங்கள். இந்த விளையாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும். அவர்களைப் பிரிக்கக்கூடாது" எனக் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு இனியாவது விளையாட்டில் அரசியல், மதச்சாயம் பூசுபவர்கள் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.