பாதுகாப்பில் கோட்டைவிட்ட பாகிஸ்தான் - வண்டிய ஏர்போர்ட்டுக்கு விட்ட நியூசிலாந்து அணி : கெஞ்சிக் கூத்தாடிய இம்ரான்கான்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் புறக்கணித்து வருகின்றன. பாகிஸ்தான் அணியும் நிலைமை புரிந்து கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களை சொந்த மைதானமாக கருதி விளையாடி வருகிறது.
அதேவேளையில், மீண்டும் சொந்த மண்ணில் எப்படியாவது கிரிக்கெட் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில், பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்து வருகிறது.
இந்த சூழலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரு அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்தப் போட்டிக்காக நியூசிலாந்து அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நியூசிலாந்து வீரர்கள் ஓட்டல் அறைகளிலேயே தங்கியிருக்குமாறு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
இரு அணிகளுமே ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வரவில்லை. பார்வையாளர்களுக்கும் ஸ்டேடியத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. நியூசிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்கள், பாகிஸ்தானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி நியூசிலாந்து அணி ரத்து செய்வதாக கூறியது.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலையில் பேரிடியாக இறங்கியது. இதனிடையே, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முழு அளவில் செய்திருப்பதாகவும், தொடரை திட்டமிட்டப்படி விளையாடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்தை சமரசம் செய்ய முயன்றது.
அதேபோல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். ஆனால், எதுவும் வேலைக்காகதால், நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்து விட்டு, கிளம்பியது.