பாகிஸ்தானில் பரபரப்பு - இம்ரான்கானின் அரசை வீழ்த்திய புதிய பிரதமராகும் ஷபாஸ் ஷெரீப்? - யார் இவர்? அறிவோம்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது.
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது.
இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். அவரை பதவியில் இருந்து நீக்கி பாராளுமன்றம் உத்தரவிட்டது. இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் ஆவார். பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ராணுவத்திற்கும், ஷரீபுக்கும் இடையே நல்லுறவு உள்ளது. இவர் ஏற்கனவே பஞ்சாப் மாகாண முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளார். அப்போது, சீனாவுடன் இணைந்து பல திட்டங்களை மாகாணத்திற்கு அவர் கொண்டு வந்தார். அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.