ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதையடுத்து பாகிஸ்தான் அரசு அதற்கு பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகிறது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்பட அனைத்து பரிமாற்றங்களுக்கும் வழிவகை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷவ்கத்தரின், நிதி தொடர்பான செனட் நிலைக்குழுவிடம் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய தீர்மானிக்கபட்டால் பரிமாற்றத்தின்போது பாகிஸ்தான் பணத்தை பயன்படுத்தலாம்.
இது வெளிநாட்டு பணத்தை சேமிக்கவும், பணத்தை வலுப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். இதனை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அகமதுல்லா வாசிக், பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்யப்படும் என்ற கருத்தில் எந்த உண்மையும் இல்லை.
அண்டை நாடுகளுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனை ஆப்கானிஸ்தானுடையதாகவே இருக்கும் என்றும், நாட்டு மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த முடிவும் தாலிபான் எடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.