இந்திய அணியை ஓட ஓட விடுவோம் - சவால் விடும் பாகிஸ்தான் வீரர்
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்லும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் முன்னாள் வீரர்கள் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது அணிக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பை தொடரில் வெற்றி பெறுவதற்கான அனைத்து திறமையும் உள்ளதாகவும், எங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நிச்சயம் இந்திய அணியை எளிதாக வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணி அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளதால் அந்த மைதானம் எப்படிப்பட்டது என்று பாகிஸ்தான் அணிக்கு தெரியும். இது எங்களுக்கு சாதகமான விஷயம் என்றும் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24 ஆம் தேதி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.