பேட்டால் பாக். வீரர் அடிக்க முயன்ற சம்பவம் - ஐசிசி அதிரடி உத்தரவு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பேட்டால் ஆப்கான் வீரரை, பாக். வீரர் அடிக்க முயன்ற சம்பவத்தில் ஐசிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளுக்கிடையே பலத்த போட்டி இருந்தது. இரு நாட்டு கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனையடுத்து, ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி அடைந்தது.
பேட்டால் அடிக்க முயன்ற பாக்.வீரர்
இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இப்போட்டி ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ஆசிப் அலி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்தினார். அப்போது, ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தனது பேட்டால் அடிக்க ஓடினார். இதனால், இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ளும் சூழல் ஏற்பட்ட நிலையில், நடுவர்களும், சக வீரர்களும் ஓடி வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஐசிசி அதிரடி உத்தரவு
இந்நிலையில், மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் போட்டி கட்டணத்திலிருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டிருக்கிறது.