“இவங்கல மாதிரி வீரர்கள் நம்மகிட்ட இல்லையேன்னு இந்தியர்கள் யோசிக்கும் காலம் வரும்” - பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேச்சு
விராத், ரோகித் மாதிரி வீரர்கள் நம்மிடம் இல்லை என்று வருத்தப்பட்ட நிலைமை மாறி, பாபர், ரிஸ்வான் போன்ற வீரர்கள் நம்மிடம் இல்லையே என இந்தியர்கள் வருத்தப்படும் காலம் வரும் என பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை சென்றது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் சிறப்பாக ஆடினர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டி-20 தொடரிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடி 2021-ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப், பாகிஸ்தான் சேனலில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கூறும்போது,
ஒரு வருடத்துக்கு முன், விராத் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மாதிரி நம்மிடம் வீரர்கள் இல்லை என்று பாகிஸ்தானியர்கள் கூறிவந்தனர்.
குறிப்பாக டி-20 போட்டிகளில். ஆனால் இன்னும் சில காலங்களில், பாபர் -ரிஸ்வான் மாதிரி நம்மிடம் வீரர்கள் இல்லையே என்று இந்தியர்கள் கூறும் காலம் வரும்' என்று தெரிவித்தார்.