சேவாக்கை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் வீரர்கள் - 20 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது நினைவுகளை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடும். இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் களத்தில் வசைபாடுவதும், மோதிக் கொள்வதும் என மைதானத்தில் அனல் பறக்கும் சம்பவங்கள் தற்போது வரை நடக்கக்கூடிய ஒன்று.
இதில் இருஅணி வீரர்களுக்கும் நல்லவிதமான அனுபவங்களும், கசப்பான அனுபவங்களும் இருப்பதை அவ்வப்போது தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 1999 ஆம் ஆண்டு மொஹாலியில் நடந்த பெப்சி கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் நான் அறிமுகமானேன். நான் களத்துக்குள் அறிமுகமானபோது, எனக்குக் கிடைத்த வரவேற்பை மறக்க முடியாது.
அப்போது பாகிஸ்தான் அணியில் இருந்த ஷாகித் அப்ரிடி, ஷோயப் அக்தர், முகமது யூசுப் எனப் பலரும் மோசமான வார்த்தைகளைக் கூறி எனக்கு வரவேற்பு அளித்தனர். அதுபோன்ற மோசமான வார்த்தைகளை அதற்கு முன் நான் காதால்கூட கேட்டதில்லை. எனக்கு பஞ்சாப் மொழி ஓரளவுக்குத் தெரியும் என்பதால் என்னை எந்தமாதிரியான மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள், பேசினார்கள் என என்னால் உணர முடிந்தது.
என்னால் அந்தப் போட்டியில் சரியாக விளையாட முடியவில்லை. ஆனால் அதன்பின் பாகிஸ்தானுக்குச் சென்று அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தேன். 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணத்தில் முல்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் முச்சதத்தைப் பதிவு செய்தேன்.
அவர்கள் என்னை பேசியதற்கு என்னுடைய பேட்டிங்கால் சரியாகப் பழிவாங்கிவிட்டதாகவே உணர்ந்தேன். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போது விளையாடினாலும் இயல்பாகவே என்னுடைய ரத்தம் கொதித்துவிடும், அதனால்தான் அந்த அணிக்கு எதிராக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என சேவாக் தெரிவித்துள்ளார்.