பாகிஸ்தான் கொடியுடன் காஷ்மீருக்குள் பறந்து வந்த பலூன் - உச்சக்கட்ட பரபரப்பு
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் கொடியுடன் பலூன் பறந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி ரகுசாக் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வயல்வெளியில் முள்கம்பி வேலியில் சிக்கிய நிலையில் பலூன் ஒன்றுடன் இணைத்து கட்டப்பட்ட சிறிய காகித பாகிஸ்தான் கொடி ஒன்று நேற்று காணப்பட்டது.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து வீசப்பட்ட அந்த பலூன் முள்கம்பி வேலியில் சிக்கி உடைந்துள்ளது. மேலும் அந்த கொடியுடன் கொடியுடன் மற்றொரு தாளும் இணைக்கப்பட்டிருந்தது. அதில் சில செல்போன் எண்கள் எழுதப்பட்டுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த கொடியை கைப்பற்றினர். தொடர்ந்து அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
எல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது. தற்போது குடியரசு தினத்தையொட்டி மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு பாகிஸ்தான் கொடி கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.