“சாதியை எதிர்ப்பவர்கள் சமூகநீதி அமைக்கிறார்கள்; அறியாதவர்கள் ராஜகண்ணப்பன் ஆகிறார்கள்” - இயக்குனர் ரஞ்சித் ட்வீட்
சாதிவெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை என்றும் சாதியை எதிர்ப்பவர்கள் சமூகநீதி அமைக்க முயற்சிக்கிறார்கள், அறியாதவர்கள் ராஜகண்ணப்பனை போல் ஆகிறார்கள் என திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த ராஜ கண்ணப்பன், திமுக ஆட்சி அமைந்து பதவியேற்றவுடன் தீபாவளிக்கு இனிப்பு வாங்குவதில் கமிஷன் பெற்றதாக புகார் எழுந்தது.
அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து, தான் சோபாவில் அமர்ந்து பேசியதால் சாதி கண்ணோட்டத்துடன் ராஜ் கண்ணப்பன் நடந்து கொண்டார் என சர்ச்சை எழுந்தது. ஆனால் அதை திருமாவளவன் மறுத்திருந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ராஜேந்திரன் என்பவரை அமைச்சர் ராஜ் கண்ணப்பன் சாதிரீதியாக திட்டினார் என புகார் எழுந்தது. இதனை கண்டித்து பலரும் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ராஜ கண்ணப்பனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது.
அதன்படி நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக மாற்றி ராஜ் பவனில் இருந்து அறிவிப்பு வெளியானது.
அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ் சிவசங்கருக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அமைச்சர் ராஜகண்ணப்பனை விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்(அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்!
— pa.ranjith (@beemji) March 29, 2022
அதில், “சாதிவெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை, தமிழர்களுக்கு, தெலுங்கர்களுக்கு அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்தால் மூலதனம் (அயோக்கியத்தனம்) சாதியை அறிந்தவர் எதிர்ப்பதன் மூலமாக சமூகநீதி அமைக்க முயற்சிக்கிறார். அறியாதவன் திரு. ராஜகண்ணப்பன் ஆகிறார் என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.