விளையாட்டுத்துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்றதாக திகழ்கிறது - பி.டி. உஷா பெருமிதம்
பி.டி. உஷா
இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்று அழைக்கப்படுபவர் பி.டி. உஷா.
பி.டி. உஷா தனது 14 வயதில் தேசிய அளவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
ஆசியப் போட்டிகளில் 1982ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை தடகளப் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 33 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவருடைய தேசிய அளவில் பல சாதனைகளை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. மத்திய அரசு பல கவுரவ விருதுகளை பி.டி. உஷாவிற்கு வழங்கியுள்ளது.
1983ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1983ம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 20ம் தேதி பி.டி.உஷா ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார்.
பி.டி. உஷா பெருமிதம்
இந்நிலையில், விளையாட்டுத்துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்றதாக திகழ்கிறது என்று மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவின் மீது பி.டி. உஷா எம்.பி. பேசுகையில், ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்கள் தங்களது எதிர்காலத்தை பாழாக்குவது மட்டுமின்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களையும் பாழாக்குகிறார்கள்.
விளையாட்டுத்துறையில் இந்தியா இன்று ஈடு இணையற்றதாக திகழ்கிறது. விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம். மாவட்டங்கள் தோறும் பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி பெறும் மையங்கள் கிடைக்கப்பெறுகின்றன என்றார்.
