3 நாடுகளில் இருந்து சென்னை வந்த ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள்..

Covid19 Oxygen equipments
By Petchi Avudaiappan May 23, 2021 07:50 AM GMT
Report

அமெரிக்கா,ஹாங்காங்,சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தடைந்தன.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் இதனைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும்,வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜனை தமிழகம் கொண்டு வருவதற்கும் தமிழக முதலமைச்சா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். மேலும் தனியாா் நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,தொண்டு நிறுவனங்களும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசும் அனுமதி அளித்துள்ளது.

 இந்நிலையில் அமெரிக்கா, ஹாங்காங், சீனா ஆகிய 3 நாடுகளிலிருந்து சரக்கு விமானங்களில் 58 ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமானநிலையம் வந்தன. இதேபோல் டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 360 பாா்சல்களில் 2,160 கிலோ எடையில் மருத்தவ உபகரணங்களும் வந்தன.

இதை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.