தொண்டர்கள் குடை சூழ ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை
தொண்டர்கள் குடை சூழ ஜெயலலிதா நினைவிடம் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் ஜுலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்தை ஈபிஎஸ் தரப்பு கூட்டியது.
இந்த கூட்டத்திற்கு தன்னிடம் ஒப்புதல் வாங்கவில்லை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது அவர் உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு வழங்க ஆணையிட்டது.
மீண்டும் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தது.ஆனால் ஓபிஎஸ் தரப்பு நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஈபிஎஸ் பதவி செல்லாது
நீதிபதி அளித்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை இந்த ஆண்டு இனி கூட்ட முடியாது ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டவேண்டும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுடன் தான் பொதுக்குழு கூட்டப்படவேண்டும்.
பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையரை நியமிக்க வேண்டும் ஜூன் 23"ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது.
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லாது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பிலும் செய்யப்பட்ட புதிய பதவி நியமனங்கள் செல்லாது.
கட்சியிலிருந்து நீக்கி இருதரப்பிலிருந்தும் நீக்கப்பட்ட உத்தரவுகளும் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தொண்டர்கள் குடை சூழ ஜெயலலிதா நினைவிடம் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.