பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதே வரலாற்று புரட்சி - ஓ.பன்னீர்செல்வம்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதே வரலாற்று புரட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு
1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருந்தார்.
அவரின் பேச்சு சர்ச்சையான நிலையில், "கடந்த 1999 ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன். தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளது" என விளக்கமளித்தார்.
இந்நிலையில், கடம்பூர் ராஜூவின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை அவரது மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டியில் அமைத்த பெருமைக்குரியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் ஜெயலலிதா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "இரட்டை இலை" சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா.
இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற ஜெயலலிதா அவர்களை குறை சொல்லும் விதமாக "பாஜக கூட்டணி முறிவு என்ற வரலாற்று பிழையை ஜெயலலிதா செய்துவிட்டார் என்று அவரால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி ஜெயலலிதா பாரதிய ஜனதா சுட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான். 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
வரலாற்றுப் புரட்சி
இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால் ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜு பேச்சுதான் வரலாற்றுப் பிழை.
"மோடியா, இந்த லேடியா" பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதா அவர்களை கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழி நான் நினைவிற்கு வருகிறது.
ஜெயலலிதாவை குறை சொல்வது என்பது உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது. ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்." என தெரிவித்துள்ளார்.