காவல் நிலையத்தில் கைதி விக்னேஷ் உயிரிழப்பு : வழக்கை சிபிஐக்கு மாற்ற ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கெல்லிஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தபோது, கத்தி மற்றும் கஞ்சாவுடன் சிக்கிய விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பதை தொடர்ந்து இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. அப்போது விசாரணையின்போது விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் மற்றும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், உயிரிழந்த விக்னேஷ் வழக்கினை சிபிஐக்கு மாற வேண்டும் என்றும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிமுக இருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.