நான் அரசியலில் இருந்து விலகத் தயார் : எடப்பாடிக்கு சவால் விடுத்த ஓபிஎஸ்
முதலமைச்சரிடம் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
எடப்பாடி போராட்டம்
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க மறுத்த தமிழக சட்டப்பேரவை தலைவரை கண்டித்து நேற்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஓபிஎஸ் ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் .
ஓபிஎஸ் திமுக பி டீம்
இது அநீதி. ஓபிஎஸ்ஐ பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை அழிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பிறகு ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் சந்தித்து பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் அப்பட்டமாகவே தெரிகிறது என்றார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் , நேற்று பழனிசாமி தலைமையில் நடந்த போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. என்னுடன் இருப்பவர்கள் பழனிசாமிக்கு ஏற்கனவே சவால் விடுத்துள்ளனர்.
பதவி விலக தயார்
என்ன சவால் என்றால் நான் தமிழக முதல்வரை சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் நான் தமிழக அரசியலில் இருந்து விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால் அவர் விலக தயாரா என்று கேட்டுள்ளார்.
அத்துடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தொடர்பான கேள்விக்கு, அந்த அறிக்கையில் என்னுடைய பெயர் எதுவும் இடம் பெறவில்லை. அப்படி இடம்பெற்று இருந்தால் என்னிடம் கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்று கூறினார்.