“தறிக்கெட்டு ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட வேண்டும்” - ஓசூரில் ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு
தறிக்கெட்டு ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தலில் 100% அதிமுக வெற்றி பெற வேண்டும் என ஓசூரில் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.
தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம்,
“தறிக்கெட்டு ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட வேண்டுமென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு 100க்கு 100% வெற்றி வாய்ப்பை தந்தால் தான் கடிவாளம் போட முடியும்” என கேட்டுக்கொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம்,
“நகர் புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான, மாபெரும் வெற்றி பெறும், அதிமுக அரசு செய்த மகத்தான சாதனைகளை மக்கள் எண்ணி பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை எதனையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் வேதனையோடு எண்ணி பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதிமுக வெற்றி பெறும்” என்றார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.