ஜெயலலிதா மரண வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் போட்டுடைத்த உண்மைகள் - சிக்கலில் சசிகலா

sasikala admk ilavarasi jayalalithaa opanneerselvam ஜெயலலிதா arumugasamycommission
By Petchi Avudaiappan Mar 22, 2022 07:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தில் 2வது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரண வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் போட்டுடைத்த உண்மைகள் - சிக்கலில் சசிகலா | Ops Appear 2Nd Day Arumugasamy Commission

இந்த ஆணையம் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆணையத்தில் ஆஜராகுமாறு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 9வது  சம்மனை ஏற்று நேற்று ஆஜரானார். 

அப்போது  2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது என்றும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றும் 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார்.  

ஜெயலலிதா மரண வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் போட்டுடைத்த உண்மைகள் - சிக்கலில் சசிகலா | Ops Appear 2Nd Day Arumugasamy Commission

அங்கு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதிலாக விரல் ரேகை பதியப்பட்டது.  இதுகுறித்த கேள்விக்கு இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தனக்கு தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். 

இந்த தேர்தலுக்கான வேப்டாளரை தேர்வு செய்ததே ஜெயலலிதா தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கப்பட்டது என தனக்கு தெரியாது என தெரிவித்த ஓ.பி.எஸ்., மருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக சசிகலா ஒருசில முறை தன்னிடம் சொன்னதாகவும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார். 

தொடர்ந்து  அவர் நன்றாக இருப்பதை பொதுவெளியில் கூறாமல் சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை என  ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் சசிகலா தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.