கடைசி வாய்ப்பு: ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் - உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தலைமை விவகாரம்
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.
தேர்தல் ஆணையம்
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்னிலையில் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இருப்பினும், பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.