திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் - பரவசம் அடைந்த பக்தர்கள்

Tiruchirappalli
By Thahir Jan 02, 2023 01:34 AM GMT
Report

பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் நம்பெருமாளை சேவித்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு 

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி நேற்று வரை வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் நடைபெற்றது.

இந்நாளில் நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

Opening of Srirangam Aranganathar Temple Heaven Gate

இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான (02-01-2023) இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4.45 மணியளவில் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார்.

அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர். பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார்.

ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைகிறார்.

பாதுகாப்பு வளையத்தில் ஸ்ரீரங்கம் கோயில் 

சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்டவரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மாநகராட்சி உடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கடந்த வருடம் சொர்க்கவாசல் திறப்பின் போது வைரஸ் தொற்று காரணமாக நம்பெருமாளுடன் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து ஆயிரம்கால் மண்டபத்திற்கு சென்றதற்கு பிறகு தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த வருடம் நம்பெருமாலுடன் பக்தர்களும் சொர்க்கவாசலை கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற ஜனவரி 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ,மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.