இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ஆன்லைன் ரம்மியால் திருச்சியில் ஒருவர் உயிரிழப்பு
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் பணத்தை இழந்த நிலையில், இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவதற்கு தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப். 26-ல் ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில், அக். 19-ல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு, கடந்த நவ.24-ல் அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். அதற்கு 24 மணி நேரத்தில் சட்டத்துறை விளக்கம் அளித்திருந்தது. ஆனாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிய தமிழக அரசு
அதனால் கடந்த டிச. 1-ல், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.
அந்த சந்திப்பின்போதும் அவர்களிடம் சட்ட மசோதா தொடர்பாக சில சந்தேகங்களை ஆளுநர் கேட்டுள்ளார். அதற்கும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
மாறாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மசோதாவை இம்மாதம் முதல் வாரத்தில் அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை, மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.
மருத்துவமனை ஊழியர் தற்கொலை
திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்தவர் ரவிசங்கர் இவர் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணத்தை இழந்ததால் ரவிசங்கர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.