24 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் முன்பதிவு - எதுக்கு தெரியுமா?
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம் ஆகியவை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஓலா நிறுவனம் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது.
இதில் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்திருப்பதாக ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படாத எலெக்ட்ரிக் வாகனத்துக்கு அதிகளவில் நடைபெற்ற முன்பதிவு இது தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ஓலா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையில் முதற்கட்டமாக 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.