அச்சத்தை ஏற்படுத்தும் ஒமிக்ரான் கொரோனா - பிரதமர் முக்கிய ஆலோசனை

modi pm discuss omikran corona
By Anupriyamkumaresan Nov 27, 2021 07:46 AM GMT
Report

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி அதன்பின் படிப்படியாக மற்ற உலக நாடுகளுக்கு பரவி ஒரு வருடத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த உலகத்தையே முற்றிலும் முடக்கி போட்டது.

இந்த தாக்கத்திலிருந்து பல நாடுகள் இன்னும் மீண்டு வர போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் 10,549 ஆகக் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்திருக்கிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 1.10 லட்சமாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 120.27 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் இந்த அளவு குறைந்திருப்பது இதுதான் முதல் முறையாகும்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதனையடுத்து இந்த புதிய வைரஸ் குறித்தும், தடுப்பூசி குறித்தும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்துவது குறித்தும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் விமானப் பயணத்துக்கு முன்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இந்தியாவுக்கு வந்தபின் பயணிகளுக்கு பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.