23 நாடுகளில் பரவியது 'ஒமைக்ரான்’ - மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

omicronvirus
By Petchi Avudaiappan Dec 01, 2021 06:34 PM GMT
Report

ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை.

ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகையைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.


குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுவதாகவும்,  ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமைக்ரான்’ கால்பதித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 23 நாடுகளில் பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா பாதிப்பு புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்தது 23 நாடுகளில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். என்று கூறினார்.