ஒமைக்ரான் பாதிப்பு - இந்திய அளவில் தமிழகம் 3-ம் இடம்
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
“ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகம் 34, தெலங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம் 2, சண்டிகர், லடாக், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று டிசம்பர் 22 நிலவரப்படி தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. தற்போது 34 ஆக அதிகரித்து இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.