டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 60 நாடுகளுக்கு பரவி உள்ளது.
மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நுழைந்தது.
இந்த நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
6 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகிய நிலையில் ஒருவர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.