டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒலிக்கும் இந்திய குழுவின் தீம் பாடல்
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று இந்த பாடல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த தீம் பாடலை பிரபல பின்னணி பாடகர் மோகித் சவுகான் இசையமைத்து, பாடியுள்ளார். அவரது மனைவி பிராத்தனா கஹிலோட் இதனை எழுதியுள்ளார்.
இந்த பாடல் அறிமுக நிகழ்ச்சியில் விளையாட்டு அமைச்சக செயலாளர் ரவி மிட்டல், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பாத்ரா, பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையகத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான் மற்றும் இதர உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரவளித்து, ஊக்கமளிக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும் என நிகழ்ச்சியில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார்.
மேலும் ஒலிம்பிக் பற்றிய வினாடி வினா, செல்ஃபி புள்ளிகள், விவாதங்கள் வாயிலாக #Cheer4India என்ற பிரச்சார இயக்கத்தை விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள், நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்காகத் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்த உள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த இயக்கத்தில் ஒவ்வொரு இந்தியரும் இணையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.