ஒரே நாளில் 1 மில்லியன் பாலோவர்களை தட்டி தூக்கிய தங்க மகன் நீரஜ் சோப்ரா!
இந்தியாவின் இப்போதைய டாபிக் நீரஜ் சோப்ரா தான். எங்கும் நீரஜ் எதிலும் நீரஜ் என்பது போல அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறார்.
ஆனால் அவர் வாங்கிய வரலாற்று தங்கத்திற்கு இதெல்லாம் சாதாரணம் தானே. 121 வருட இந்தியர்களின் ஏக்கத்தை அவர் தானே பூர்த்தி செய்தார். அவரை மலையளவு கொண்டாடலாம். அதில் தப்பேதும் இல்லை.
வாழ்த்து மழையில் மட்டுமல்லாமல் பரிசு மழையிலும் அவரை நனைத்து வருகின்றனர். இன்டிகோ விமான நிறுவனம் இன்னும் ஓராண்டுக்கு விமானத்தில் பயணிக்க இலவசம் என அறிவித்திருக்கிறது.
பிரபல கார் நிறுவனமான மகிந்திரா அவருக்கு சொகுசு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய், பஞ்சாப் அரசு 2 கோடி ரூபாய், மணிப்பூர் அரசு, சிஎஸ்கே அணி நிர்வாகம், பிசிசிஐ ஆகியவை தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளன.
சிஎஸ்கே அணி அவர் ஈட்டி எறிந்த தூரத்தைக் குறிப்பிடும் விதமாக 8758 (87.58 மீட்டர்) என்ற எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை பரிசளிக்கவிருக்கிறது.
இவ்வாறாக பரிசு மழையில் நனைந்து இன்ப வெள்ளத்தில்
திளைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் சாதனை புரிந்திருக்கிறார்.
தங்கம் வெல்வதற்கு முன்னர் அவருக்கு 10 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்குக்கு படையெடுக்க தொடங்கினர் இந்தியர்கள்.
இதன் விளைவாக 24 மணி நேரத்திற்கு முன்பாகவே கூடுதலாக 1 மில்லியன் பாலோவர்கள் அவரைப் பின்தொடர்ந்துள்ளனர். இதன்மூலம் தற்போது நீரஜ்ஜை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அதேபோல ட்விட்டரில் அவரை 3.15 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.