அடிக்கடி ஆம்புலன்ஸை பயன்படுத்திய நபர் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
தைவான் நாட்டில் ஆம்புலன்ஸ் சேவையை முதியவர் ஒருவர் தவறாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து நாடுகளிலும் உயிர்காக்கும் வாகனமாக செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ் சேவையை தேவையில்லாமல் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதனால் மற்றவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும்.
அதேசமயம் ஆம்புலன்ஸிற்கு சாலையில் வழிவிடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு தண்டனை வழங்கவும் சில நாடுகள் வழிவகுத்துள்ளன. அப்படியான இந்த அவசர கால சேவையை முதியவர் ஒருவர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஒரு மருத்துவமனை சார்பில் சமீபத்தில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அந்த முதியவர் இந்த ஆண்டு மட்டும் சுமார் 39 முறை ஆம்புலன்ஸ் புக் செய்து பயணம் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இவர் ஆம்புலன்ஸ் புக்கிங் செய்த தேதிகளை வைத்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பார்த்த போது இவர் அத்தனை முறையும் அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை செய்தபோது அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் இனிமேல் இது போல செய்தால் தண்டனை வழங்கப்படும் என முதியவரை எச்சரித்து அனுப்பினர்.