படுத்து கொண்டே சிகரெட் பிடித்த முதியவர் உடல் கருகி பலி - பரமக்குடியில் சோகம்
ராமநாதபுரம் அருகே படுத்து கொண்டே சிகரெட் பிடித்த முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் மகன் வீட்டில் வசித்து வந்தார்.
இதனிடையே இன்று காலை வீட்டில் தனியாக இருந்த வேல்முருகன் படுக்கை அறையில் சிகரெட் பிடித்தபடி படுத்து இருந்ததாகவும், அதனை சரியாக அணைக்காமல் கீழே போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் படுத்திருந்த படுக்கையில் தீப்பிடித்து கட்டில் முழுவதும் எரிய தொடங்கியது. இதில் கட்டிலில் படுத்திருந்த வேல்முருகன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தும் அது பலனளிக்காததால் பரமக்குடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைந்து வேல்முருகனின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.