‘உடனே கல்யாணம் பண்ணி வையுங்க’ - நடிகை ரோஜாவை அதிரவைத்த முதியவர் : சுவாரஸ்ய சம்பவம்!
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990 களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு தீவிர அரசியலில் களம் இறங்கினார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின் அவருக்கு 2014, 2019 சட்டமன்ற தேர்தல்களில் சீட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்,2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தனி அன்பை பெற்றவர் நடிகை ரோஜா கடந்த மாதம் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், வீட்டுக்கே நலத்திட்டங்கள் என்ற திட்டத்தின்படி ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் கேட்டு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்தில், ஒவ்வொரு வீடாகச் சென்று, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா என்று விசாரித்தார்.
அப்போது ஒரு வீட்டில் இருந்த முதியவரைப் பார்த்து, 'பென்ஷன் கிடைக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த முதியவர், 'பென்ஷன் எல்லாம் கிடைக்கிறது. மற்ற திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை' என்றார்.
'உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? மனைவிக்கு என்ன வயது?' என்று ரோஜா கேட்க, உடனே முதியவர், 'எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. அதுதான் பிரச்சினை. எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்' என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ந்துபோன ரோஜா, 'குடும்பத்துக்கு அரசின் திட்டங்கள் வரவில்லை என்றால் அதற்கு தீர்வு காணலாம். ஆனால் உங்களுக்கு நான் எப்படி திருமணம் செய்துவைக்க முடியும்?' என்று சிரித்தபடியே கேட்டுவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார்.
முதியவரின் வித்தியாசமான வேண்டுகோள்,அமைச்சர் ரோஜாவுடன் வந்த மற்றவர்களையும் சிரிக்கவைத்தது.