அன்பாக பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி கடிதம் எழுதிய மூதாட்டி
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து மூதாட்டி ஒருவர் கடிதம் எழுதியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டியான ராதாம்மாள் என்பவர் 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக தனது மகனால் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்ததால் அடுத்த மூன்று நாட்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் 3 நாட்களாக தன்னை அன்போடும் கவனமாகவும் பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த மூதாட்டி கடிதம் எழுதியுள்ளார்.
அதை கண்டு நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள், மூதாட்டியின் கடிதம் தங்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.