சாமியாடி செவிலியர்களை விரட்டிய மூதாட்டி - வைரல் வீடியோ

coronavaccine
By Petchi Avudaiappan Dec 01, 2021 09:02 PM GMT
Report

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தவந்த சுகாதாரத்துறை ஊழியர்களை மூதாட்டி ஒருவர் சாமியாடி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமாக தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100% தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் பல்லாயிரக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2வது தவணை தடுப்பூசியை  செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நவம்பர் 30 ஆம் தேதி காலை புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வயதான தம்பதிக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இருவர் சென்றனர். அப்போது, தங்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லை என வயதான தம்பதி தெரிவித்தனர்.

தடுப்பூசி செலுத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் பாதுகாப்பானது என தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் எடுத்துக்கூறினர். ஆனாலும், அந்த தம்பதி மறுப்பு தெரிவித்து வந்தனர். திடீரென சாமியாடிய மூதாட்டி 'மாரியாத்தாவுக்கு தடுப்பூசி சேராது' என முழக்கமிட்டார். 

இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்வதறியாது தவித்தனர். ஒரு கட்டத்தில் மூதாட்டியின் கணவர் சுகாதாரத்துறை ஊழியர்களை அங்கிருந்து புறப்படுமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.