கோயம்பேட்டில் காற்றில் பறக்கும் கொரோனா விதிகள் - அதிகாரிகள் ஆய்வு

Corona Koyambedu
By mohanelango Jun 04, 2021 06:19 AM GMT
Report

அனைவரும் தடுப்பூசி செலுத்த என்பதை வலியுறுத்தும் வகையில், தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் கடைகளை திறப்பதற்கு ஆலோசித்து வருவதாக, சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால், சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு ஆகியோர் அரசின் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ககன் தீப் சிங் பேடி, மார்கெட்டில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை என புகார் வந்திருக்கிறது. எனவே பாதுகாப்பு மற்றும் கண்கானிப்பை தீவிரமாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

மார்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மார்கெட்டில் கண்கானிப்பு கோபுரங்கள் அமைத்து தொடர்ந்து கண்கானிக்க திட்டம் வைத்துள்ள்ளோம். அதேபோல் கோயம்பேடு காய்கறி சந்தையில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும்.

இதுவரை 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதே கொரோனாவை கட்டுப்படுத்தும்.

எனவே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோயம்பேடு காய்கறி சந்தை சுத்தம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவால் கூறுகையில், ”கோயம்பேட்டில், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றப்படுவது இல்லை என்று புகார் வந்ததையடுத்து ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். அடுத்த 10 நாட்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்க ஜெடக் சிரு, கடந்த மே மாதத்தில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தையில் 11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி சந்தையை இடம் மாற்றினால் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் கடைகளை திறப்பதற்கு ஆலோசித்து வருகிறோம் என சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு தெரிவித்தார்.