ரூ.1500 கடனை திருப்பி தராததால் இளைஞர் - கையில் கயிறு கட்டி 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்...!
ரூ.1500 கடனை திருப்பி தராததால் இளைஞரின் கையில் கயிறு கட்டி பைக்கில் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசாவின், கட்டாக் நகரில் பெஹரா (22) என்ற இளைஞர், ரூ.1,500 கடனாக வாங்கியுள்ளார். 30 நாட்களில் திருப்பித் தருவதாக கூறி வாங்கிய அவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால், கடன் கொடுத்த 2 இளைஞர்கள், பெஹராவின் கைகளை 12 அடி நீள கயிற்றால் கட்டி, அதன் மறுமுனை இரு சக்கர வாகனத்துடன் இணைத்து, ஸ்டூவர்ட்பட்னா சதுக்கத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுதாஹத் சதுக்கம் வரை சுமார் 20 நிமிடங்களுக்கு அவர்கள் பின்னாலேயே ஓட விட்டனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இச்சம்பவம் குறித்து பெஹரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கயிறு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
