தர்மராக நின்று ஓ.பி.எஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் - ரவீந்திரன் துரைசாமி கருத்து
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.
பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் - இபிஎஸ்
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார்.
ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்
பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.பி.எஸ். வெளிநடப்பு
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் ஏற்பட்டது.
முதுகில் குத்தி தாக்குதல்
ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது முதலில் தண்ணீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அவர் வெளியே வந்தபோது ஓ.பி.எஸ். முதுகில் குத்தப்பட்டதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இரு தரப்பு அதிமுகவினருக்கிடையே முட்டிக்கொள்ளும் அசாதாரண சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
வாகன டயர் பஞ்சர்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
ரவீந்திரன் துரைசாமி கருத்து
இந்நிலையில், தர்மராக நின்று ஓ.பி.எஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், இந்த அளவுக்கு தர்ம சங்கடத்திற்கு உள்ளான சூழ்நிலையிலும் தர்மராக நின்று ஓ.பி.எஸ். அமைதி காத்தது பெரிய விஷயம். நாகரீகமற்ற முறையில் ஓ.பி.எஸ். அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தொண்டர்களுக்கு அவர் மீதுள்ள பற்றுதலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.