தலையில் நட்டோடு தையல் போட்ட அரசு மருத்துவமனை செவிலியர்கள்..!
வேலுார் அரசு மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சென்ற லாரி டிரைவரின் தலையில் சிக்கிய நட்டோடு செவிலியர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலையில் நட்டோடு வைத்து தையல் போட்ட செவிலியர்கள்
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னுார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலுார் நோக்கி வந்துள்ளார். அகரம்சேரி அருகே வந்த போது பின்னால் வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் செவிலியர்கள் தையல் போட்டுள்ளனர்.
மாலை 4 மணி ஆகியும் மருத்துவர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்
அங்கு மீண்டும் கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
அடுக்கம்பாறை மருததுவமனையில் சிகிச்சை பெற்ற போது விபத்தின் போது சிக்கிக் கொண்ட நட்டை அகற்றாமலே மருத்துவர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது. இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சென்று கேட்டுள்ளனர்.
அதற்கு மருத்துவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் பாப்பாத்தி பேசுகையில்,
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சென்ற லாரி டிரைவரின் தலையில் நட்டு வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.