சீமான் கொடுத்த ஆறுதல்...இடைத்தேர்தலில் கொலையான நிர்வாகியின் மனைவிக்கு சீட்
மக்களவை தேர்தலுடன் சேர்த்து காலியாக இருக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து வரும் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளை இணைத்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
நாம் தமிழர் வேட்பாளர்
திராவிட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அண்மையில் அறிமுகப்படுத்தின. 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஒரே கட்டமாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
இதில் கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் போட்டியிடுகிறார். அதே போல மயிலாடுதுறையில் காளியம்மாள் போன்றோர் நட்சத்திர வேட்பாளராக களமிறங்குகிறார்கள். அதே போல விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளரையும் சீமான் அறிமுகப்படுத்தினார்.
கட்சி வேட்பாளராக ஜெமினி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரின் பின்புலம் தான் தற்போது பலரையும் கவர்ந்துள்ளது. இவர் படுகொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஆவார்.
சேவியர் குமார் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி மயிலோடு கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஆவார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சேவியர் குமாரின் மனைவி ஜெமினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மகளிரணி செயலாளராக இருக்கும் ஜெமினி எம்எஸ்சி, பிஎட், எம்பில் படிப்புகளை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.