காவிரி நீர்: சித்தார்த்துக்கு எதிர்ப்பு; ஒரு கன்னட படம் தமிழ்நாட்டில் ஓடாது - சாட்டை துரைமுருகன் எச்சரிக்கை!
நடிகர் சித்தார்த்தின் சித்தா பட நிகழ்வில் கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சாட்டை துரைமுருகன்.
காவிரி நீர் விவகாரம்
காவிரி நீர் விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா பந்த், பெங்களூர் பந்த் என போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், கர்நாடகா பந்த் போராட்டம் இன்று நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டத்திற்கு கர்நாடகா முழுவதும் 2,000 அமைப்புகள் ஆதரவு தருவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைபின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
அப்போது கன்னட அமைப்பினர் கும்பலாக உள்ளே நுழைந்து "இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகிறது, அதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். இங்கே வந்து தமிழ் படம் பற்றி பேசிக் கொண்டிருப்பதா? என எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் நடிகர் சித்தார்த் தமது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். கன்னட அமைப்பினரின் இந்த அநாகரீக செயலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
சாட்டை துரைமுருகன்
இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது "நடிகர் சித்தார்த் அவர்களை பேச விடாது தடுத்து அனுப்பியிருக்கிற கன்னட இனவெறியர்களின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.
கன்னட நடிகர்கள் தமிழ்நாட்டில் பெரிதும் நடிக்கிறார்கள் என்பது இந்த இனவெறி கும்பலுக்கு தெரியுமா தெரியதா? பதிலுக்கு நாங்கள் செய்ய ஆரம்பித்தால் ஒரு கன்னட நடிகர்களின் படம் தமிழ்நாட்டில் ஓடாது! முதல்வரே கொஞ்சம் கூட உங்களுக்கு கோவம் வரவில்லையா @mkstalin' என்று பதிவிட்டுள்ளார்.