கேரளாவில் கலப்பு திருமணம் செய்த அரசியல் நிர்வாகியால் வெடித்தது புது சர்ச்சை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கலப்பு திருமணம் செய்த நிலையில் புது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தேயப்பரா பகுதியில் யோஷ்னா மேரி ஜோசப் என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில், யோஷ்னா மேரிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்காக யோஷ்னா கடந்த 2 வாரங்களுக்கு முன் சவுதியில் இருந்து கேரளா வந்தார்.
இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் யோஷ்னா பெற்றோருக்கு தெரியாமல் திடீரென வீட்டை விட்டு வெளியேறி ஷஜீன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் கோழிக்கோடு மாவட்டம் கண்ணோத் பகுதி தலைவராக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷஜீன் செயல்பட்டு வருகிறார். யோஷ்னா மற்றும் ஷஜீன் 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது மகள் யோஷ்னாவை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஷஜீன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் யோஷ்னாவின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் கோர்ட்டிற்கு சென்ற நிலையில் யோஷ்னாவும், ஷஜீனும் இணைந்து வாழ எந்த தடையும் இல்லை என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த கலப்பு திருமண விவகாரம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.