தீயாய் பரவிய வீடியோ...சொந்த ஊருக்கு கிளம்பிய வட மாநிலத்தவர்கள் - ரயில் நிலையத்தில் வழியும் கூட்டம்
வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிய படையெடுத்து கிளம்பி வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் இவர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரயில் தண்டவாளத்தில் வடமாநிலத்தவர் உடல்
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
ரயில்வே காவல் நிலையம் முன்பு குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவற்றை காணவில்லை எனவும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குற்றஞ்சாட்டினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வடமாநில தொழிலாளியின் மரண விவகாரத்தில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா கேட்டுக் கொண்டார்.
உதவி எண்கள் அறிவிப்பு
திருப்பூரில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விஷமத்தனமான செய்திகள் பரப்பப்பட்டுவருவதாக கூறினார்.
தவறான உள்நோக்கத்தோடு விஷம பிரசாரத்தை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
வடமாநிலத்தவர்கள் தாக்குவது தொடர்பான வீடியோவை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் ரயிலில் முண்டியடித்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 94981 - 01300, 0421 - 2203313 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.