சினிமா பார்த்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டு கடும் வேலை தண்டனை - அதிர்ச்சி சம்பவம்!
பாப் இசை சினிமா பார்த்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டனை
உலகின் மர்மமான ஒரு நாடாக வடகொரியா உள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அதிகளவில் வெளியில் தெரிவதில்லை. ஏனெனில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இந்நிலையில் தென் கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்த இரண்டு 16 வயது வட கொரியா சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
இது தொடர்பாக வட கொரியாவிலிருந்து வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய்க்யோங்ஹுய் கூறுகையில் “இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரியா மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது. அது கிம் ஜோங் உன் கட்டமைத்துள்ள வட கொரிய சிந்தனையை எதிர்ப்பதாக உள்ளது. அதனாலேயே அவர் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.