சுனாமியை ஏற்படுத்த கடலுக்கடியில் புதிய அணு ஆயுதம் - பதற்றத்தில் அரசு!
செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுதத்தை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
புதிய அணு ஆயுதம்
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக முரண்பாடு உள்ளது. வடகொரியா தனது அணு ஆயுதங்களால் தென்கொரியாவை தொடர்ந்து அச்சத்தில் வைத்துள்ளதாக உலகஅரங்கில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் பிரமாண்ட கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில், வடகொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
செயற்கை சுனாமி
அதில், "கடலுக்கு அடியில் செலுத்தப்பட்ட ஆயுதம் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து பின்னர் வெடித்து சிதறியது. இதன் மூலம் செயற்கை சுனாமியை ஏற்படுத்தினோம். தலைவர் கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் இந்த சோதனை நடந்தது. சோதனை வெற்றிகரமாக அமைந்தது அவர் மகிழ்ச்சி அடைந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வடகொரியாவின் இந்த சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் கூறுகையில் `வட கொரியாவின் இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு அது நிச்சயமாக உரிய விலையை கொடுக்க நேரிடும்' என்றார்.