என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது - நடிகர் சரத்குமார்
அரசாங்கம் தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு தினங்களில் படம் ரிலீஸ்
மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
திரைப்படம் வெளியாக இன்னும் 2 தினங்கள் உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருகிர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த சரத்குமார்,
யாரும் கேள்வி கேட்க முடியாது
"குடி, சிகரெட் பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் இதெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா. அதே மாதிரி எதையெதை தடை செய்யணும்னு நான் முடிவு பண்ண முடியாது.
அதை உச்சநீதிமன்றமும், அரசும் மட்டும் தான் பண்ண முடியும். அப்படி அரசாங்கம் தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அரசாங்கம் தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது.
முதலில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்கள். அதே போல டாஸ்மாக் கடைகளால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அதை மூட வேண்டும் என்று சொல்லுங்கள், உங்களுக்கு ஆதரவாக நான் போராட தயாராக இருக்கிறேன் .
சினிமாவில் சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று கீழேயே விழிப்புணர்வு வாசகம் வருகிறது. அதனால எல்லாரும் சிகரெட் பிடிக்கிறதா நிறுத்திட்டீங்களா என்ன, இல்லையே. குடிப்பழக்கத்தால் தினமும் இரவு நேரத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
அப்போ அதை முழுமையாக ஒழித்து விட வேண்டியதுதானே. ஏன் பண்ண முடியல. இது ரொம்ப பெரிய விவாதம், இன்னொரு நாள் நல்லா விரிவாக பேசுவோம்" என பதிலளித்தார்.