வரும் 28, 29-ம் தேதிகளில் பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை : தலைமைச்செயலாளர் அறிவிப்பு
வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பணிக்கு வராமல் இருக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 28, 29-ம் தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 25-கோடி ஊழியர்களுக்கும் மேல் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொது செயலாளர் எம். துரைபாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பணிக்கு வராமல் இருக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு அறிவித்துள்ளார்.

மேலும், வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, போக்குவரத்து, மின்வாரியத்துறை ஊழியர்கள் மார்ச் 28,29 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்திருக்கும் இந்த வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.