ஆர்.எஸ்.எஸ் அமைப்பை யாரும் எதுவும் செய்யமுடியாது - மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை யாரும் எதுவும் செய்யமுடியாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் அனுமதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்துவிட்ட நிலையில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடுத்தனர்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நவம்பர் 6 ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி வழக்கினர்.
இதற்கு தமிழக காவல்துறை வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யாராலும் எதுவும் செய்ய முடியாது
இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்,
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
" இன்று இந்தியா 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி முடிந்துள்ளது. விரைவில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அடைய வேண்டிய வளர்ச்சி தொடர்பாக நாம் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம்.
இதன்படியே இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் நாம் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை, நாட்டு மக்களின் நலம் சார்ந்த கொள்கைகளை, கோட்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.
குறிப்பாக பாஜகவின் இந்த எட்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். சுகாதாரத் திட்டங்களுக்கு நாம் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.
இன்றைக்கு நாட்டில் யார் வீட்டிலும் கழிவறை இல்லாமல் இல்லை என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதற்காகக் கடுமையான கஷ்டங்களை இந்த அரசு எதிர்கொண்டது.
மக்களுக்காக எந்த ஒரு கடினமான நிலையைக் கூட நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு காந்தியடிகள் பிறந்தநாள். அவரின் எண்ணத்தின்படியே இந்த ஆட்சி நல்லாட்சியாகச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்திலும் கர்ம வீரர் காமராஜரின் எண்ணப்படியே எங்களின் நற்பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளோம். அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைய வளர்ச்சி திட்டங்களுக்கு காமராஜர் அன்றே முன்னெடுப்புக்களைச் செய்திருந்தார்.
பெருவாரியான அணைகளைக் கட்டி விவசாயம் செழிக்க அவர் பாடுபட்டார். இதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதற்காகவே நாம் அவரை கொண்டாடி வருகிறோம்.
இன்று வந்தவுடனேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்பாகவும், அந்த அமைப்பு நடத்தவுள்ள பேரணி தொடர்பாகவும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது நேற்று முளைத்த அமைப்பு அல்ல. 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு.
இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கின்ற ஒரு அமைப்பு. இந்த பெருமைக்கு காரணமான ஒரு உன்னதமான அமைப்பு ஆர்எஸ்எஸ்.
அதன் பெருமைகளை யார் நினைத்தாலும் குலைக்க முடியாது. எத்தனையோ முறை இந்த அமைப்பை சிதைக்க முனைத்திருக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கம் மீண்டு வந்து, மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.
குறிப்பாக நேருவே அதனை தடை செய்ய முயன்றார், ஆனால் அதிலிருந்து மீண்ட இயக்கம்தான் இந்த அமைப்பு. எனவே யாராலும் இந்த அமைப்பை எதுவும் செய்துவிட முடியாது.
நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள். எனவே சட்டம் என்ன உரிமையைக் கொடுத்துள்ளதோ அதன்படியே எங்களின் செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.